February 8, 2010

விஜய் நீயா... நானா...



தமிழ்த் தொலைக்காட்சிகளில் வரும் சிறிதளவாவது உருப்படியான நிகழ்ச்சிகளில் விஜயின் நீயா? நானா?வும் ஒன்று. 24.01.2010 அன்றான விவாதம் சிறு சிறு வேலைகள் (வீட்டுவேலை, மெக்கானிக், சேல்ஸ் ரெப், ஆட்டோ ஓட்டுனர், இப்படி) செய்பவர்களுக்கும், பயனாளர்களுக்கும் இடையிலான உறவைப்பற்றியதாக இருந்தது. பயனாளர்களின் குற்றச்சாட்டுகளும் அதற்கு பணியாளர்களின் பதிலும் முன்வைக்கப்பட்டன்.அவைகளில் சில:-
*^*^*^*^*
??? வீட்டுவேலை செய்பவர்களால் தனிப்பட்ட/வீட்டுச்செய்திகள் மற்றவர்களுக்குப் பரப்பப்படுகிறது.

!!! வீட்டுக்காரர்கள்தான் பக்கத்துவீட்டுச் செய்திகளை ஆர்வத்தோடு விசாரிக்கிறார்கள்.
*^*^*^*^*
??? வண்டியை பழுதுபார்க்க/சர்வீஸ்செய்ய விடும்போது கூடுதலாக பில்போடப்படுகிறது; ஒரு குறிப்பிட்ட கடையிலேயே தொடர்ந்து ஸ்பேர் வாங்குவதன் மூலம் கமிசன் பெறுகிறார்கள்.

!!! அப்படியெல்லாம் இல்லை. ஒரே கடையில் தொடர்ந்து உதிரிபாகங்கள் வாங்கும்போது, வாங்கியபின் அதில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் மாற்றிக்கொள்வது எளிதாக இருக்கிறது
*^*^*^*^*
??? ஆட்டோவில் மீட்டர் போடுவதே கிடையாது. பயணிகளுக்கு மரியாதை கொடுப்பதில்லை.

!!! மீட்டர் போடுவது கட்டுபடியாகவில்லை. அரசாங்கம் நியாயமான கட்டணத்தை நிர்ணயிப்பதில்லை. பயணிகள்தான் ஆட்டோக்காரர்களை ஏய் ஆட்டோ என மரியாதைக்குறைவாக அழைக்கிறார்கள்.
*^*^*^*^*
பணம்கொடுக்கிறோம் என்பதால் பணிசெய்பவர்கள் நம் அடிமைகள் அல்ல நமக்குத் தோன்றியபடி அவர்களை நடத்துவதற்கும் பேசுவதற்கும். நாம் பெரும்பாலனவர்கள் பிறிதோரு இடத்தில் வேலை செய்பவர்கள்தான் என்பதை மறந்து எளிய மனிதர்களின் மேல் அதிகாரம் செலுத்தும் மனப்பான்மையைத் தவிர்க்கவேண்டும் போன்ற நல்ல விசங்களை நம்மில் பதித்தது.

உறுத்திய ஒரு விசயத்தைப் பதியவே இவ்விடுகை. பணிசெய்பவர்கள் தரப்பிலிருந்து பேசிய ஒரு சேல்ஸ்ரெப், 'வணிகம் நிமித்தம் வீடுகளுக்குச்சென்றால் கதவையே திறப்பதில்லை. மிகக்கேவலமாக நடத்துகிறார்கள். நாய்களை அவிழ்த்து விடுகிறார்கள்' என வருத்தப்பட்டார்.

அதற்கு ஒருபெண், 'வீட்டுவேலைகளை முடித்துவிட்டு சற்று அயர்வாக ஓய்வெடுக்கும் நேரங்களில் கதவைத்தட்டி தொந்தரவு செய்கிறார்கள், அதனால் கதவைத் திறப்பதில்லை' எனப் பதிலளித்தார்.

நிகழ்ச்சி நடத்துனரோ வீடுதேடி வரும் சேல்ஸ்ரெப்களை மரியாதையாக நடத்துங்கள். கனிவாகப் பேசுங்கள். அவர்களும் மனிதர்கள்தான் என ஆலோசனை சொன்னார்.

என் கேள்வி இதுதான்.
தன் வருமானம் நிமித்தம், முன்பின் தெரியாத ஒருவரின் வீட்டுக்கதவை முன்அனுமதியின்றி தட்டுவது சரியான செயலா? ஒருவரின் தனிப்பட்ட நேரத்தை தன் சுயநோக்குக்காக வலியச்சென்று அபகரிப்பது முறையா? இம்மாதிரியான வணிகஉத்தி ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றுதானா?.

.

February 3, 2010

குடியரசுநாள் தொலைக்காட்சி உலா



குடியரசுதின விடுமுறை. வழக்கம்போல் தொலைக்காட்சியில் வரும் சிறப்பு நிகழ்ச்சிகளில் நேரம் கரைந்தது. அவர்களும் வழக்கம்போல திரைப்பட நடிக நடிகைகள் நாட்டுக்காற்றும் அரும்பணியை பேட்டியெடுத்துக் கொண்டிருந்தார்கள். விஜய், மக்கள் இவையிரண்டும் எனக்கு விருப்பமானவை. விஜயில் பொங்கல் தினத்தில் ஒளிபரப்பிய சிறப்பு நிகழ்ச்சிகளையே மறுபடி அரைத்துக்கொண்டிக்க, மக்கள் தொலைக்காட்சிப் பக்கம் வந்தேன். "உங்களுக்குத் தெரியுமா?" என்றொரு சிறப்பு நிகழ்ச்சி. அனைத்து தரப்பையும் சார்ந்த பொதுமக்களிடம் நம் குடியரசு தொடர்பான சிலகேள்விகள் கேட்டு மக்களின் அறிவைச்(!) சோதித்து, சரியான பதில் சொல்பவர்ளுக்கு பரிசும் கொடுத்தார்கள். குடும்பத்தினர், தொழிளாளர்கள், மாணவர்கள், மீனவர்கள், என இப்படி அனைவரிடமும் எளிய கேள்விகள்....

இந்திய நாட்டின் விடுதலைநாளுக்கும் (சுதந்திரதினம் தமிழ்ச்சொல் இல்லை என்பது உறைத்தது) குடியரசுநாளுக்கும் என்ன வேறுபாடு? -இது ஏழெட்டுப்பேர் கொண்ட ஓர் உயர்நடுத்தர குடும்பத்தினரிடம் கேட்கப்பட்ட கேள்வி. தெரியவில்லை என ஓரிருவர் சொல்ல, மற்ற இருவர் சொன்ன பதில்கள் ஆர்வமூட்டுவதாக இருந்தது. "முன்பு இருந்துவந்த அன்னியர்களின் கொடியைப் புறக்கணித்துவிட்டு நம் நாட்டுகென்று ஒரு கொடியை நாம் ஏற்றுக்கொண்ட நாள்" என மிகத் தெளிவாக விளக்கினார்கள். குடியரசுநாளைக் கொடியரசுநாளாகப் புரிந்துகொண்டார்கள் போலும்.

தற்போதைய குடியரசுத்தலைவரின் பெயர் என்ன? -இது வெளியில் விளையாடிக்கொண்டிருந்த பத்து பனிரண்டு பள்ளிச் சிறுவர்கள் கொண்ட குழுவினரிடம் கேட்கப்பட்ட கேள்வி. பலர் தெரியாது என்றனர். பரவலாக காந்திஜி, காந்தி, காந்தியடிகள், நேரு என்ற பதில்கள் வந்தன. காந்தியளவுக்கு வேறுயாருக்கும் நாட்டோடு தொடர்பு இல்லை அவர்களவில் (இது பரவாயில்லை. ஆறாம்வகுப்பு படிக்கையில் எங்கள் பள்ளி இன்ஸ்பெக்சனுக்கு வந்த அதிகாரி 'தமிழகத்தின் முதலமைச்சர் யார்' எனக்கேட்க 'ஹெட்மாஸ்டர்' என ஒரு மாணவனிடமிருந்து பதில் வந்தது. அப்போது எங்களுக்கு உலகமே ஹெட்மாஸ்டர்தான்!). ஒரு சிறுவன் "தெரியும். ஆனால் அப்பெயரை வாயில் சொல்ல வரவில்லை" என்றான் அப்பாவியாக. சற்று வயதில் பெரிய ஒருவன் மட்டும் பிரதிபா பாட்டீல் எனச் சரியாகச் சொன்னான். அதன்பின், முதலில் அப்பெயர் சொல்லவராத மாணவன் சற்று முயற்சிக்குப்பின் சொல்ல, என் காதில் விழுந்தது 'பிரதிபா பாட்டி'.

மதியம் விஜய்-பக்கம் போனால் காந்தி திரைப்படம் தமிழில் போய்க்கொண்டிருந்தது. வெள்ளைநிறத்தில் இருந்த காந்தியை (Ben Kingsley) "கருப்பர்களுக்கு முதல்வகுப்பில் இடமில்லை" எனக் கூறி ரயிலில் இருந்து கீழே தள்ளிக்கொண்டிருந்தார்கள். மாணவப்பருவத்தில் ஆங்கிலத்தில் புரிந்தும் புரியாமலும் பார்த்தது. குடியரசு நாளில் பார்க்க சரியான படம். தமிழ் காந்தியோடு அன்றைய பொழுது கடந்தது.

.

February 1, 2010

கலைஞர் புத்தாண்டு?!!!



தை முதல்நாள். நண்பர் ஒருவர் பொங்கல் வாழ்த்துச்சொல்ல தொலைபேசியில் அழைத்தார்.

"பொங்கல் வாழ்த்துக்கள்"

"நன்றி. உங்களுக்கும் பொங்கல் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள்"

"ம்ஹூகும்.... எங்களுக்கு பொங்கல் மட்டும்தான். புத்தாண்டு இல்லை"

"என்னாச்சு? தை முதல்நாள்-னு அரசு அறிவிச்சு இது இரண்டாவது வருசமாச்சே!"

"எங்களுக்கு இது புத்தாண்டு இல்லை. கலைஞர் சொன்னா நாங்க ஏத்துக்கணுமா என்ன?"

"தை முதல்நாளை புத்தாண்டுன்னு நீங்க ஏத்துக்கலையா... இல்ல கலைஞர் அறிவிச்சதனால ஏத்துக்கலையா?"

"கலைஞர்தானே தன்னிச்சையா அறிவிச்சார்.........."

"அம்பது அறுபது வருசத்துக்கு முன்னாடி மறைமலை அடிகளார் தலைமையில் ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழறிஞர்கள் கூடி முடிவுசெய்த விசயமாச்சே! கலைஞர் அம்முடிவை வெறும் அரசு அறிவிப்பாகத் தானே செய்தார்?"

".............................."

"நூற்றுக்கணக்கான தமிழ் அறிஞர்கள் மீது நம்பிக்கையும் மதிப்பும் இருக்கா இல்லையா? இருந்தா ஏத்துக்கறதுல என்ன சிரமம்?"

".............................."

"அப்புறம்....... கலைஞர் அரசு இதை அறிவிக்காம வேறு யார் வந்து அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கிறீர்கள்?"

"ம்....................சரி. அத அப்புறம் பாத்துக்கலாம். பொங்கல் நல்லா போய்க்கிட்டிருக்குல்ல"

அழைப்பைத் துண்டித்தார். ஏண்டா அழைத்தோம் என நொந்துபோயிருக்கலாம்.

சர்வதாரி, பிரசோத்பத்தி, விக்ருதி போன்ற எல்லாமே தமிழர்கள் ஆண்டுகள்தான்..... பாரம்பரியமாக தமிழர்களின் புத்தாண்டு சித்திரை.... சூரியன் சித்திரையில் தான் அந்த ரேகையிலிருந்து இந்த ரேகைக்கு வருகிறார்.... இவையெல்லாம்கூடப் புரியுது.

ஒன்னு மட்டும் புரியல. அரைநூற்றாண்டுக்கு முன்பாக தமிழறிஞர்களால் முடிவு செய்யப்பட்ட ஒரு விசயத்தை, கலைஞர் தன்னிச்சையாக அறிவிப்பு செய்தார் என்பதாகப் பெரிதுபடுத்துவது சரியா?.

.